ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் தொடர்ந்தும் இயங்க வேண்டும்-கல்முனை மாநகர சபை

அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்று அரசாங்கத்தைக் கோரும் வலுவான பரிந்துரையை கல்முனை மாநகர சபை முன்மொழிவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வைத் தொடர்ந்து முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு, மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் ஒலுவில் துறைமுகத்தில் கடலரிப்பினால் புதையுண்டு போயுள்ள மீன்பிடி படகுகளை மீட்பதற்காகவும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காகவும் வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் துறைமுக அபிவிருத்தி அமைச்சும் கடற்றொழில் அமைச்சும் அவசரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் மாநகர சபையின் அத்தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் பருவ மாரி காலத்தில் ஏற்படக்கூடிய கடல் சீற்றத்தில் இருந்து மீனவர்களின் பாரிய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான முன்னோடி நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் கல்முனை மாநகர சபை வலியுறுத்தியுள்ளது.
-அஸ்லம் எஸ்.மௌலானா-
Previous Post Next Post