உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காக அதிகரிப்பு-வர்த்தக அமைச்சர்

இலங்கையின் விவசாய மற்றும் தூய உற்பத்தித் துறையில் பெரிய ஏற்றுமதி வாய்ப்பு திறந்துள்ளதுடன் தசாப்தத்தில் முதல்தடவையாக, உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சீனா தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின் {China National Agriculture Wholesale Market Association (CAWA)} தலைவர் ஷின்ஜுன் மா  (Zengjun Ma) தலைமையில், உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, கடந்த 15 கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்திக்க வந்திருந்த போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கையின் விவசாய மற்றும் தூய உற்பத்தித் துறையில் (Fresh produce sector) ஒரு பெரிய ஏற்றுமதி வாய்ப்பு திறந்திருக்கிறது.

சமீபத்திய புதிய நவீன தொழில்நுட்பத்துடன் பங்குதாரர்களை இலங்கை விநியோகஸ்தர்களுடன் இணைத்து, இலங்கையில் ஒரு கூட்டு முயற்சிக்கு முதலீடு செய்ய, சீனா தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின் உறுப்பினர்களை நாம் அழைக்கின்றோம். 

எமது விவசாய மற்றும் தூய உற்பத்தித்துறையின் மீது சீன கொள்வனவாளர்கள்   ஆர்வம் கொண்டுள்ளார்கள். இது சீனாவுடனான எமது ஏற்றுமதிகள் மற்றும் மொத்த வர்த்தகத்தையும் அதிகரிக்கும்.

இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகளின் கருத்துப்படி, இலங்கையுடனான சீனாவின் மொத்த வர்த்தகம், 2016 ஆம் ஆண்டிலிருந்து நடப்பாண்டு வரை, கடந்த ஆண்டுகளில் 03% சதவீதத்துடன் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முதல்தடவையாக, சீனாவுக்கான இலங்கை ஏற்றுமதிகள் 108% சதவீதத்துடன் மிகப்பெரிய அதிகரிப்பை காட்டின. இது 2016 ஆம் ஆண்டில் 199 மில்லியன் அமெரிக்க டொலராகவும், 2017 ஆம் ஆண்டில் 415 மில்லியன் அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது. ஒரு தசாப்தத்தில் சீனாவுக்கான இலங்கை ஏற்றுமதிகள் இருமடங்காகக் காணப்பட்டதும் இதுவே முதல் தடவையாகும்.

கடந்த ஆண்டு சீனாவுக்கான முன்னணி ஏற்றுமதிகளாக கப்பல்கள், படகுகள், ஆடை, சிலோன் தேயிலை, காய்கறிகள் மற்றும் ஜவுளி ஆகியன காணப்பட்டன. 2016 – 2017 ஆண்டுக்கு இடையில் சீனாவுக்கான தூய உற்பத்திகள் மீது, குறிப்பிடத்தக்க ஏற்றுமதி காணப்படவில்லை. அதேவேளை, இவ்விரு ஆண்டுகளில் சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் 02% சதவீதமாக 4.19 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது. இது 2011 ஆம் ஆண்டிலிருந்து நடப்பாண்டு வரையில், இலங்கைக்கான சீனாவின் இறக்குமதியில் ஏற்பட்ட முதல் சரிவு எனலாம்.

சீனாவின் தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்திக்க, வலுவான இலங்கை விநியோகஸ்த பிரதிநிதிகள் குழுவொன்றை ஏற்பாடு செய்வதற்கான வேலைப்பாடுகளை ஆரம்பிக்க, எனது அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளேன்” என்று அமைச்சர் கூறினார்.

“சீனா தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கம், சீன சிவில்துறை அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசிய தொழில் சங்கமாகும். இலங்கையின் தூய உற்பத்திகளை நாம் ஈர்க்கிறோம். இலங்கையுடனான வர்த்தகம் மற்றும் விவசாய ஒத்துழைப்புக்கான கூட்டு முயற்சியை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இலங்கை உற்பத்திகள் சுவை மட்டுமல்ல, சிறந்ததாகவும் உயர் தரமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகின்றன. இத்திறன்கள் ஊடாக இலங்கையின் விவசாயம் மற்றும் தூய உற்பத்திகளினை, சீனாவின் மிகப்பெரிய சந்தையில் விரிவுபடுத்தலாம் என்பது தெளிவாக உள்ளது.

சீன நுகர்வோர் சந்தை பெருமளவில் விரிவடைந்து வருகிறது. இலங்கையின் விநியோகஸ்தர்கள், சீனாவிற்குச் செல்வதற்கு ஒரு தகுந்த நேரம் வந்துள்ளது. மாறும் விலையிடல் மூலோபாயத்தை எங்கள் சந்தையில் வென்றெடுக்க, நாங்கள் பரிந்துரைக்கிறோம். சீனா அதிகளவில் கடல் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில், இலங்கையைப் பயன்படுத்த முடியும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் கூற்றுப்படி, சீனா சில்லறை விற்பனை துறையில் இந்த ஆண்டு (2018), உலகின் எந்தவொரு பொருளாதாரத்திலும் முன்னணியில் உள்ளது” என சீனா தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின் தலைவர் ஷின்ஜுன் மா இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.

மேற்படி இச்சந்திப்பில், இலங்கை வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி, சோனாலி விஜேரத்ன மற்றும் அத் திணைக்களத்தின் பல அதிகாரிகளும், சீனா தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளும் இணைந்துகொண்டனர். 

-ஊடகப்பிரிவு- 
Previous Post Next Post