பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் துன்புறுத்தலுக்குள்ளான சிறுமிக்கு நீதிவேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் அதற்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் நடாத்தும் அரசியல் கட்சிகள் கடந்த காலத்தில் மட்டக்களப்பில் கொல்லப்பட்ட சிறுமி மற்றும் பெண்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கவும் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கையினை முன்வைத்த அவர், சிறுமி ஹிஷாலினியினை சிலர் தங்களின் சுயநல அரசியலுக்கு பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களவர்கள் அத்துமீறிய காணி அபகரிப்பினை முன்னெடுக்கும்போது அதனை தடுத்து நிறுத்தமுடியாத நிலையிலேயே இங்குள்ள அரசாங்க ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதாகவும் தெரிவித்தார்