படை பட்டாளத்தோடு 3ஆம் திகதி மஹிந்த மைத்திரி நேரில் பேச்சு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையிலான தீர்க்கமான சந்திப்பொன்று எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.
புதிய அரசமைப்பு, உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் இரு கட்சிகளுக்கிடையிலான பொது இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் கலந்துரையாடும் இறுதிச் சந்திப்பாக இது அமையவுள்ளதால் முக்கியத்துவமிக்க சந்திப்பாகக் கருதப்படுகின்றது.

இந்தச் சந்திப்புக்காக பொது எதிரணியினதும், சு.கவினதும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்றைய தினம் கடிதம் மூலம் உத்தியோகபூர்வ அழைப்பு சு.கவின் செயற்குழுவால் விடுக்கப்படவுள்ளது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாரிய அரசியல் பிரசாரத்தை நாடுபூராகவும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ முன்னெடுத்துவருகின்றார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்விலும் பொதுஜன பெரமுன இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் கணிசமாக வீழ்ச்சியடையும் என்பதாலேயே மீண்டும்  பொது எதிரணியியுடன் இணக்கப் பேச்சுகளுக்கு சு.க. களமிறங்கியுள்ளது. எனினும், மைத்திரியின் தலைமைத்துவத்தில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தமது அரசியல் öŒயற்பாடுகளை முன்னெடுக்கமாட்டார் என்பது பொதுவான கருத்தாகப்  பேசப்படுகிறது.

எதிர்வரும் 3ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தத் தீர்க்கமான சந்திப்பின் பின்னர் பல அறிவிப்புகள் இருதரப்பிலுமிருந்து வெளியாகும் எனவும் அறியமுடிகின்றது.

-சுடர் ஓளி-
Previous Post Next Post