பொத்துவில் ஹெடஓயா நீர்ப்பாசனத் திட்டம் சம்பந்தமான உயர்மட்டக் கலந்துரையாடல்!

பொத்துவில் ஹெடஓயா நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான குழுவினருக்கும், பொருளாதார, திட்டமிடல் அமைச்சின் செயலாளர் ஏ.எம்.றபீக்கிக்குமிடையில்  (29) சனிக்கிழமை பொருளாதார, திட்டமிடல் அமைச்சில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, பொத்துவில் ஹெடஓயா நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தினை அமுல்படுத்துதல் மற்றும் அதற்கான நிதி மூலங்களை கண்டறிதல் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் இதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் பிரதி அமைச்சர் ஹரீஸ் அமைச்சின் செயலாளருக்கு விளக்கமளித்தார்.

இச்சந்திப்பில் பொத்துவில் ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஆதம்லெவ்வை உள்ளிட்ட ஹெடஓயா நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,

பொத்துவில் மக்கள் மிக  நீண்ட காலமாக தேவையாகவுள்ள ஹெடஓயா நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தினை இந்த நல்லாட்சி அரசில் நிறைவேற்றக் கூடிய சாத்தியங்கள் உள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் மேற்கொண்டுள்ளதுடன் இதற்கான அனுமதியினை நீர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்ஸா வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஹெடஓயா  நீர்ப்பாசனத் திட்டத்தினை  அமுல்படுத்துவதன் மூலம் பொத்துவில் மக்களினால் நீர்ப்பாசனமின்றி கைவிடப்பட்டுள்ள வயற்காணிகள் நெற் செய்கைக்கு உற்படுத்த முடிவதோடு அம்மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.
-ஹாசிப் யாஸீன்-
Previous Post Next Post