பொதுபலசேனா அமைப்பு மற்றும் இனவாத சிந்தனை கொண்ட அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்! -கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை

நமது நாட்டில் அண்மைக்காலமாக பொதுபலாசேனா அமைப்பும், சில இனவாத சிந்தனை கொண்ட அமைப்புக்களும் முதலமைச்சருக்கு எதிராக மேற்கொள்ளும் இனவாத பேச்சுக்களையும், செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தி, இவ்  இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களையும், கௌரவ பிரதம மந்திரி அவர்களையும் கோரும் தனிநபர் பிரேரனை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பையினால் மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது....

நமது நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளும், இஸ்லாம் மார்க்கத்தினை அவமதிக்கும் செயற்பாடுகளும் பொதுபலசேனா அமைப்பினாலும், சில இனவாத அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வுகளால் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் கவலையடைந்துள்ளதுடன் முஸ்லிம் மக்களின் மனங்களும் புன்படுத்தப்பட்டுள்ளன. எல்லா மார்க்கங்களும் ஏனைய மார்க்கங்களையும், மார்க்க தலைவர்களையும் கௌரவ படுத்த வேண்டும் என்றே கூறுகின்றன.

பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் சமயத் தலைவராக செயற்பட்டு இன ஒற்றுமைகளை ஏற்படுத்த வேண்டிய சமயத் தலைவர் ஒருவர் இன்னொரு சமயத்தை கொச்சைப் படுத்தும் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு இலங்கையில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்களை மோதவிடும் எத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறித்து நாம் அனைவரும் கவலைப்பட வேண்டியுள்ளது.


இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து இனவாத உணர்வுகளை தூண்டும் பொதுபலசேனா அமைப்பிற்கும், ஏனைய இனவாத அமைப்புக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் இனவாத உணர்வுகளைத் தூண்டும் பேச்சுக்களையும், செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துமாறும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களையும், கௌரவ பிரதம மந்திரி அவர்களையும், கிழக்கு மாகாண சபை கோர வேண்டும் என்ற தனிநபர் பிரேரனையே எதிர்வரும் 21.07.2016ம்; திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


-எம்.ஜே.எம்.சஜீத்-
Previous Post Next Post