கிழக்கு மாகாண சபையில் கோரம் போதாமல் இருந்ததன் காரணமாகவே உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் சமர்ப்பித்த பலஸ்தீனம்-இஸ்ரேல் தொடர்பான பிரேரனை எடுத்துக்கொள்ளாமைக்கு காரண என ஶ்ரீ.மு.காங்கிரஸ் குழுத்தலைவரும் உறுப்பினருமான அன்வர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கிழக்கு மாகாணசபையின் 65 ஆவது அமர்வு கடந்த 27.10.2016 அன்று சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்ன தலைமையில் ஆரம்பமானது. அன்றய தினம் சபைக்கு அதன் தவிசாளர் சந்திரதாஷ கலபதி சமுகமளித்திருக்கவில்லை அதனால் பிரதிதவிசாளரே சபையை தலைமையேற்று நடாத்தினார்.
ஆனால் பகலுணவின் பின்னர் சபையில் சமர்ப்பிக்க பல பிரேரணைகள் இருப்பில் இருந்தன. ஆனால் பகலுணவின் பின்னர் சபை கூடியபோது போதுமான உறுப்பினர் சபையில் இருக்கவில்லை. ஆனால் ஒரு பிரேரணை சமர்ப்பிப்பது தொடர்பில் முதலமைச்சர் எந்த வகையிலும் பொறுப்பானவர் அல்ல. எதிர்கட்சித் தலைவர் மற்றும் கட்சிகளின் தலைவர்கள், குழுத்தலைவர்கள் ஒன்று கூடி முடிவுகள் எடுத்ததன் பின்னரே சபையில் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படும்.
ஆனால் குறித்த பிரேரணை தொடர்பாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் இன்னும் பலரும் அங்கு இப்பிரேரணை தொடர்பில் தங்களின் ஆதரவுகளைத் தெரிவித்தனர். ஆனால் இணையங்களில் வெளியாகியிருக்கும் சோடிக்கப்பட்ட அறிக்கைகளுக்கும் இப்பிரேரணை தொடர்பாக கூறப்படும் முறைப்பாடுகளுக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபையின் குழுத்தலைவர் என்ற வகையில் பதிலளிக்கவேண்டிய கடமை எனக்குள்ளது.
எனவே சபையில் நிலவிய கோரமின்மை காரணமாக குறிப்பிட்ட இப்பிரேரணையுடன் இன்னும் பல பிரேரணைகள் அடுத்த சபை அமர்வில் எடுத்துக்கொள்வதாக தீர்மாணித்தே சபை நடவடிக்கை முடிவுக்கு வந்தன. எனவே யார் மீதும் அவதூறாகப் பேசப்படும் எந்த அறிக்கைகளோ, செய்திகளோ ஆதாரமின்றி மக்களிடம் சென்றடையும்போது பலமுறையில் நோக்கப்படுகின்றன. ஆகவே எந்த செய்தி என்றாலும் ஆராய்தலுடன் அணுகுதல் நன்று என்பது எனது கருத்து என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீ.மு.காங்கிரஸ் குழுத்தலைவருமான ஆர்.எம்.அன்வர் தனதறிக்கையில் தெரிவித்தார்.
-சப்னி அஹமட்-