கல்முனை சந்தாங்கேணி மைதானத்தினை அபிவிருத்தி செய்ய பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையில் நிபுணத்துவக் குழுவினர் விஜயம்

கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தினை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்;.எம்.ஹரீஸ் முன்னெடுத்து வருகின்றார்.
இம்மைதான அபிவிருத்திற்கான திட்ட வரைபடங்களை விளையாட்டுத்துறை அமைச்சின் நிபுணத்துவக் குழுவான சீ.ஈ.சீ.வீ நிறுவன பொறியியலாளர் குழுவினர் தயாரித்துள்ளதுடன் இவ்வரைபடங்களுடன் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தினை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் தலைமையில் இந்நிபுணத்துவக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (19) சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது இம்மைதானத்தினை 400 மீற்றர் மைதானமாக வடிவமைத்தல், நீச்சல் தடாகம் மற்றும் உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணம், வடிகாலமைப்பு திட்டம், வாகன தரிப்பிடம் நிர்மாணம் என்பன பற்றி நிபுணத்துவக் குழுவினர் வரைபடங்களுடன் பிரதி அமைச்;சருக்கு விளக்கமளித்தனர்.

பிரதி அமைச்சர் ஹரீஸூடனான இவ்விஜயத்தின் போது சீ.ஈ.சீ.வீ நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் தம்மிக்க தர்மவர்தன, சிரேஷ்ட படவரைஞர் பிரனீத் அமரதுங்க,  திட்ட முகாமையாளர் பொறியியலாளர் அகில ரங்க பண்டார, தென்கிழக்கு உதவி பொது முகாமையாளர் பொறியியலாளர் சரித் குணதிலக, கிழக்கு மாகாண திட்ட முகாமையாளர் பொறியியலாளர் எம்.ஏ.றிஸ்கான, கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர பொறியியலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-ஹாசிப் யாஸீன்-
Previous Post Next Post