பொத்துவில் வலயப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு ஆளுநர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்வு...

பொத்துவில், கல்முனை(மத்தி) கல்வி வலயங்களை அமைப்பதற்கான பொறுப்பு கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் ஒப்படைப்பு..



பொத்துவில் உப கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் அப்பிரதேச மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டு வருவதாகவும் குறித்த பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெவ்வை கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோவிடம் வேண்டுகோள் விடுத்தார்.


பொத்துவில் உப கல்வி வலயத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று (29) கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வேண்டுகோளை விடுத்தார்.

இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெவ்வை உரையாற்றுகையில் பொத்துவில் உப கல்வி வலயத்தில் அமைந்துள்ள 20 பாடசாலைகளில் 77ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், இவ்வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்குமாறும் பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக அவசர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கடந்த வாரம் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தேன்.

பொத்துவில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினால் அப்பிரதேச மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது. இப்பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்களை நிவர்த்தி செய்யுமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் பலமுறை பாடசாலைகளை மூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இவ்விடயம் கிழக்கு மாகாண சபையில் பல முறை முன்மொழியப்பட்டும் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயம் ஸ்தாபிப்பது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் கடந்த 2011,2015,2016 ஆகிய வருடங்களில் முன்மொழியப்பட்டும் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது 60 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான கல்வி வலயத்தை மனிதாபிமான நோக்குடன் அமைத்துக் கொடுக்குமாறு இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.



பொத்துவில் உப வலய பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் நோக்குடன் கல்முனை வலயப்பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்களில் இருந்து 46ஆசிரியர்களை அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கோட்டப்பாடசாலைகளுக்கு அனுப்புவதாகவும் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று கோட்டப்பாடசாலைகளில் 46ஆசிரியர்களை பொத்துவில் உப வலயப் பாடசாலைகளுக்கு வழங்குவதாகவும் இவ்விடமாற்றங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்துவதாகவும் இதன்போது தீர்மாணிக்கப்பட்டது.

இந்த விடயமாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு பொத்துவில் கல்முனை (மத்தி) கல்வி வலயங்களை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு. தண்டாயுதபாணி மேற்கொண்டு கிழக்கு மாகாண அமைச்சரவைக்கு விசேட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பதாகவும் தீர்மாணக்கப்பட்டது.


இதன்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு. தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபெதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெவ்வை, ஆளுநரின் செயலாளர் திருமதி முரளிதரன் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. அசங்க அபேவர்த்தன, மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திரு. திசாநாயக்க, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. நிசாம்அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம் காசீம்பொ, த்துவில் பிரதேச அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

இது இவ்வாறிருக்க கடந்த காலங்களில் பொத்துவிலின் கல்விக்கு தடையாக இருந்த சில விஷமிகள் இன்று பொத்துவில் பிரதேசத்தில் தங்களது சகாக்கள் மூலம் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை பொத்துவிலுக்கான கல்வி வலயத்தைப் பெற்றுக் கொள்வதை குழப்புவதாகவும் வேறு சிலர் இதற்கு பக்க பலமாக நிற்கின்றார்கள் எனவும் உண்மைக்குப் புறம்பான துண்டுப்பிரசுரத்தை  வெளியிட்டுள்ளனர்.

(றியாஸ் ஆதம்)
Previous Post Next Post