Top News

அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்களின் குறைகளை தீர்த்துவைப்பது தொடர்பான கலந்துரையாடல்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் வேண்டுகோளுக்கமைவாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிஸ் கட்சியின் தலைமையினால் முன்னெடுக்கப்படுகின்ற மாபெரும் நடமாடும் சேவை தொடர்பான கலந்துரையாடல் இன்று மாலை (23) தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு, நகர திட்டமிடல் அமைச்சில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர், சுகாதார அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு, நகர திட்டமிடல் அமைச்சின் உயர் அதிகாரிகள், அம்பாறை மாவட்டத்திலுள்ள முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலின்போது தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர்.

இக்கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் முடிவு எட்டப்பட்டது.
இந்த மாபெரும் நடமாடும் சேவையில் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு, நகர திட்டமிடல் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலகம், கிழக்கு மாகாண பிரதம செயலகம், பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம், நிருவாகம், முதலமைச்சு, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, வீதி அபிவிருத்தி அமைச்சு, விவசாய அமைச்சு போன்ற அமைச்சுக்களின் அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள் மற்றும் சுகாதார திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம், கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபை போன்றவற்றின் உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த மாபெறும் நடமாடும் சேவையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துரை, கல்முனை, சாய்ந்தமருது, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், அம்பாறை போன்ற பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள பொதுமக்கள் மேற்குறிப்பிடப்பட்ட அமைச்சுக்களின் திணைக்கள பிரச்சினைகளை அன்றைய தினத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் கூறினார்.


-பைஷல் இஸ்மாயில் -
Previous Post Next Post