Top News

எதிர் கட்சியில் இருந்து அனைவரும் ஆளும்தரப்பின் பக்கம் வருவார்கள் நம்பிக்கையுள்ளது என்கிறார் -முதலமைச்சர்

இலங்கையில் உள்ள அனைத்து சபைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகக் கிழக்கு மாகாண சபை திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்.
கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சி அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன சேர்ந்து ஆட்சியமைத்திருக்கும் இவேளையில் எதிர்கட்சி ஆசணத்தில் அமர்ந்திருக்கும் மீதமான  உறுப்பினர்களும் ஆளும்தரப்பின் பக்கம் வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

நேற்று இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் 47 ஆவது அமர்வில் எதிர் தரப்பில் இருந்து இரண்டு உறுப்பினர்கள் ஆளும்தரப்பின் பக்கம் தாவினர் இது தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண ஆட்சியில்  நடுநிலமை தவறாது மூவின மக்களையும் ஒரே பார்வையில், ஒரே நோக்கில் விகிதாசார முறையில் ஒவ்வொரு நடவடிக்கையும், நகர்வுகளும் சரியாக இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். கிழக்கில் எது நடந்தாலும் சேவைகள், வேலைவாய்ப்புக்கள் என்றாலும் விகிதாசாரம் பேணப்படுகிறது. இது நல்லாட்சி, நல்லாட்சியில் அனைவரும் பலன்பெற வேண்டும். சுயநலமாக எந்தத் தீர்மாணமும் எடுக்காது கலந்தாலோசனை மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் அனைத்து உறுப்பினர்களும் இந்நல்லாட்சியை விரும்புகின்றனர்.

ஆகவே அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயபட்டால்தான் இன்னும் கிழக்கில் தேங்கிக் கிடக்கும் முக்கியபல வேலைகளை மக்களுக்காக செய்து கொடுக்க முடியும். ஒருவர் வேலை செய்கின்றபோது மற்றவர் விவாதம் புரிவதால் அதன் மூலம் தாமதம் ஏற்படுகிறது. ஒற்றுமையின்மையால் பாதிப்படைவது நமது மக்கள் என்பதனைக் கருத்தில் கொண்டு அனைத்து உறுப்பினர்களும் ஒன்று பட்டு செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்தார்.

கடந்த மாகாண சபை அமர்வின்போது எதிர் கட்சி ஆசணத்தில் அமர்ந்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக்க்கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் ஆளும்தரப்பின் பக்கம் வந்தனர். அதுபோன்று இம்மாதம் இடம்பெற்ற இந்த அமர்வின்போது எதிர்தர்ப்பில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இரண்டு பேர் ஆளும்தரப்பின் பக்கம் வந்துள்ளனர். அவர்களை வாழ்த்துக்கூறி வரவேற்பதுடன் அவர்கள் ஆளும்தரப்பின் பக்கம் அழைத்து வந்த சபையின் தவிசாளர் சந்திரதாஷ கலபதிக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இவ்வாறு ஏனைய உறுப்பினர்களும் வந்து சேர்ந்து மக்கள் பணிகளைச் சரிவரச் செய்ய முன்வாருங்கள் என்று முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கேட்டுக்கொண்டார் .
-CM Media-
Previous Post Next Post