மக்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபடவே நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

மக்கள் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபடவே நல்லூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவர், இன்று காலை நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நாட்டிலுள்ள நிலைமைக்கு அமைவாக, நல்லூர் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான பாதுகாப்பினை வழங்க, இலங்கை இராணுவம், கடற்படை, வான்படை என முப்படையும் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலினாலே, இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை சற்று அதிகமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மக்களின் பாதுகாப்புக்காகவே எம்மால் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதே ஒழிய, அவர்களுக்கு இடையூறு விளைவிக்க அல்ல என்பதை நான் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.

இங்கு வரும் அனைவரும் அச்சமின்றி வழிபாடுகளில் ஈடுபடவேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும். மக்களின் பாதுகாப்பு தொடர்பாக எமக்கு பாரிய பொறுப்பு உள்ளது. இதற்காக கடமைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பாதுகாப்புத் தரப்பினருக்கும் நான் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈஸ்டர் தாக்குதல்களைப் பார்க்கும்போது, இன்னும் அந்த அச்சுறுத்தல் முற்றாக இல்லாதொழிந்துவிட்டதாக எம்மால் கூறமுடியாது. 'லேன் புள்ப்' தாக்குதல் போன்ற தாக்குதல்கள் கூட இடம்பெற வாய்ப்புள்ளது.  இவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்புத் தரப்பினருக்கே நன்றாகத் தெரியும். எனவே, எமது கடமையை சரிவர நிறைவேற்ற இடமளிக்க வேண்டும் என்று அனைவரிடமும் நாம் கேட்டுக்கொள்கிறோம்' என மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post