சாபக்கேடாக பார்க்கப்படும் ஒலுவில் துறைமுகம் சமூகத்தின் சொத்தாக மாற்றியமைக்கப்படும்

மர்ஹூம் அஷ்ரஃபினால் கொண்டுவரப்பட்ட ஒலுவில் துறைமுகம் இன்று சாபக்கேடாக பார்ப்பக்கப்படுகிறது. அப்படியான ஒலுவில் துறைமுகத்தையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்து, ஒலுவில் துறைமுகம் சமூகத்தின் சொத்தாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றியமைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை மசூர் சின்னலெப்பை ஞாபகார்த்த சந்தை சதுக்கத்துக்கு முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நேற்றிரவு (27) நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

முன்னாள் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் மேற்கொண்ட செயற்பாடுகளை இன்று விமர்சிக்கின்றனர். ஒலுவில் துறைமுகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட எல்லா விடயங்களையும் இன்று சாபக்கேடாக பார்க்கின்றனர். அதிலுள்ள நன்மைகளை யாரும் பார்ப்பதில்லை. ஒலுவில் துறைமுகத்தை தென்கிழக்கின் வரப்பிரசாதமாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றியமைக்கும்.

ஒலுவில் கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, கொந்தளிப்பு காலங்களில் கரையொதுங்கும் மண்ணை அள்ளுவதற்காக தனியான கப்பலை வாங்கி விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

ஒலுவில் துறைமுகத்தை அண்டிய பிரதேசத்தில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு பிரதமர் தயாரிக்கொண்டிருக்கிறார். இதன்மூலம் ஒலுவில் பிரதேசம் என்றுமில்லாதவாறு அபிவிருத்தியடைய காத்துக்கொண்டிருக்கிறது. எது சாபக்கேடு என்று சொல்கிறார்களோ அதை இந்த சமூகத்தின் சொத்தாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றியமைக்கும்.

பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, சம்மாந்துறை ஆகிய இடங்களில் 400 மீற்றர் ஓட்டப்பந்தய மைதானங்களை எஞ்சியிருக்கின்ற இரண்டு வருட ஆட்சிக் காலத்துக்குள் அமைத்துவிட்டுத்தான் நாங்கள் பதவிகளை துறப்போம். 

அட்டாளைச்சேனையில் 120 மில்லியன் ரூபா செலவில் அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரியில் கேட்போர்கூடம் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுதவரி, அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக பாலமுனைக்கு 80 மில்லியன் ரூபா, ஒலுவில் பிரதேசத்துக்கு 60 மில்லியன் ரூபா, இறக்காமம் பிரதேசத்துக்கு 120 மில்லியன் ரூபா என இந்த வருடத்துக்குள் பாரியளவு நிதிகளை ஒதுக்கியுள்ளோம்.

பொத்துவில் ஹெடஒயா நீர் வழங்கல் திட்டம் தொடர்பில் 2001ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்திருந்தோம். தற்போது அதனுடன் சேர்த்து நீர்ப்பாசன திட்டத்தையும் மேற்கொள்வதற்காக சீன அரசாங்கத்தின் 300 மில்லியன் டொலர் (சுமார் 45,000 மில்லியன் ரூபா) கடனுதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

12,000 மில்லியன் ரூபா செலவில் வாழைச்சேனை, ஓட்டமாவடி நீர் வழங்கல் திட்டம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது. காத்தான்குடி கழிவுநீர் திட்டத்துக்கு 100 மில்லியன் டொலர் (சுமார் 15,000 மில்லியன் ரூபா) செலவில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருக்கிறது.

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மூலம் இந்த வருடத்துக்குள் மாத்திரம் என்றுமில்லாத வகையில் 300,000 மில்லியன் ரூபா பெறுமதியான திட்டங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதற்கு முன் ஆட்சியிலிருந்து எந்த அரசாங்கமும் செலவிடாத அளவு இம்முறை நீர் வழங்கல் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்முனை – சம்மாந்துறை – நிந்தவூர் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக, திருகோணமலை முதலீட்டு வலயத்தை திட்டமிடும் சிங்கப்பூர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்காண்டிருக்கிறோம். இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக 2018ஆம் ஆண்டு, மேட்டு வட்டையிலிருந்து மாவடிப்பள்ளி வரை மாற்று வீதி அமைப்பதற்கு 1,100 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளோம். 

தேர்தல் திருத்த சட்டங்கள் வரும்போது சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் அன்றும் இன்றும் போராடிக்கொண்டிருக்கிறது. வட்டாரம் மற்றும் தொகுதி தேர்தல் முறையில் 70:30 என்றிருந்த விகிதாசரத்தை மாற்றுவதற்கு உத்தரவாதம் தரவேண்டுமென மாகாணசபைகள், உள்;ளுராட்சி அமைச்சராகவிருந்த அதாவுல்லாவிடம் கேட்டோம். அதற்கு பஷில் ராஜபக்ஷதான் உத்தவாதரம் தந்தார். அது நடக்காமல் விட்டது வேறுகதை. அதாவுல்லா அமைச்சராக இருந்தாலும் அவர் மஹிந்தவின் கையாளாகத்தான் இருந்தார். அவரின் அமைச்சரவை பத்திரங்களை தயாரிப்பது பசில் ராஜபக்ஷ. கையொப்பம் இடுவது மட்டும்தான் இவரின் வேலை. 

வட்டாரம் மற்றும் தொகுதி என்பன 70:30 என்றிருந்த தேர்தல் முறையை நீண்ட போராட்டத்தின் பின், தற்போது 60:40 என மாற்றியமைத்திருக்கிறோம். ஆனாலும், எல்லை நிர்ணயத்தில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் அதற்கென தனியான குழுவை அமைத்து மறுபரீசிலனை செய்யுமாறு கோரியுள்ளோம். பிரதமர் முன்னிலையில் சட்டமா அதிபரிடம் இப்பிரச்சினைக்கு முடிவு கட்டிவிட்டுத்தான் நாங்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டோம்.

இவ்வாறான நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்ற சொல்லித் திரிகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசாங்கத்திலும், கிழக்கு மாகாண சபையிலும் பலமான இடத்திலுள்ள இக்கட்சியை அசைத்துப் பார்ப்பதற்கே இவ்வாறான புரளிகளை கிளப்பிவிடுகின்றனர்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் பேரினவாத பூதங்கள் புதைகுழிக்குள் போய்விடாது. எதிர்காலத்திலும் பேரினவாத அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். அதை எதிர்கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் பலமான நிலையில் இருக்கவேண்டும். பேரினவாத செயற்பாடுகளை காரணம்காட்டி கட்சியை விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அம்பாறை மாவட்டத்தில் தயா கமகேயை தவிர, வேறு யாரும்; பாராளுமன்ற ரீதியில் முஸ்லிம் காங்கிரஸ{க்கு எதிராக இல்லை. இரண்டு பிரதி அமைச்சர்களையும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் இக்கட்சி வைத்துக்கொண்டிருக்கிறது. அதுபோல கிழக்கு மாகாணசபையிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம். இவ்வளவு பதவிகளையும் வைத்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்கவில்லை. பல இடங்களிலும் நாங்கள் கோடிக்கணக்களில் செய்துவரும் அபிவிருத்திகளை மேடைபோட்டு பேசாத காரணத்தினால், முஸ்லிம் காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு திரிகிறது.

தங்களுக்கு அமைச்சு பதவி வேண்டும் என்பதற்காகவும், பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டும் என்பதற்காகவும்தான் கட்சியில் இருந்து பிரிந்துசென்றவர்கள் தலைமைக்கு எதிராக செயற்பட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கிழக்கு மாகாணத்தில் தேர்தல் கேட்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

கிழக்கில் தேர்தலில் போட்டியிடுவது எனக்கு புதிய விடயமல்ல. என்னால் அதிகூடிய விருப்பு வாக்குளை இங்கு பெறமுடியும், பெற்றும் காட்டியிருக்கிறேன். அப்படிச் செய்திருந்தால், இங்கிருக்கின்ற ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போயிருக்கும். அத்துடன் கண்டியில் கிடைக்கவிருந்த ஒரு மேலதிக ஆசனமும் இல்லாமல் போயிருக்கும். பேசுபவர்கள் எதையும் பேசலாம். ஆனால், அதிலுள்ள யதார்த்தத்தை புரிந்து பேசவேண்டும்.

-(பிறவ்ஸ்)-
Previous Post Next Post