போனில் பேசிய பெண்ணை நேரில் பார்த்தபோது மொக்கையாக இருந்தார், அதனால் கொன்னுட்டேன்... கொலையாளி அதிரடி வாக்குமூலம்

கோவையில் இளம்பெண் ஒருவரைக் கொலை செய்த தொழிலாளி, மிஸ்டு காலில் பேசிய பெண் நேரில் பார்க்கும் போது சுமாராக இருந்ததால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகிலுள்ள மெட்டலா கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். ஒர்க்‌ஷாப் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. குடும்பத்தை ஊரிலேயே விட்டுவிட்டு, கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒர்க்‌ஷாப் ஒன்றில் செல்வராஜ் வேலை செய்து வந்தார்.

இதனால் பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

தீபாவளிக்கு இரு நாட்களுக்கு பிறகு, அவருடைய வீட்டில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். செல்வராஜ் தலைமறைவாகி விட்டார். அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையிலும், அரை நிர்வாணமாகவும் இருந்ததால் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது மர்மமாக இருந்தது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு செல்வராஜூவுடன், ஒரு இளம்பெண் அந்த வீட்டில் இருந்ததை வீட்டு உரிமையாளரின் மகன் விஜய் பார்த்ததாக கூறினார். எனவே, செல்வராஜ் தான், அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர்.

இதனால் அவரை தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில், கரூரில் செல்வராஜ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மடக்கி கைது செய்தனர்.

அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் சத்யா என்பதும், தேனியை சேர்ந்தவர் என்றும், அவர் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

அவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட செல்வராஜ், கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ''கடந்த இரு மாதம் முன்பு, எனது செல்போனுக்கு ஒரு மிஸ்டுகால் வந்தது. பின் நான் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன். எதிர்முனையில் ஒரு பெண் பேசினார். அதனால், நான் பேச்சை தொடர்ந்தேன். அப்போது அவர், தனது பெயர் சத்யா என்றும், அரக்கோணத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் வேலை செய்வதாகவும் கூறினார்.

நானும், என்னைப்பற்றி கூறினேன், "மிஸ்டுகால்" மூலம் பேச தொடங்கிய நாங்கள் மணிக் கணக்கில் பேசுவோம். ஆனால் எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளதை அவரிடம் மறைத்து விட்டேன். இதனை தொடர்ந்து சத்யாவை நேரில் சந்திக்க ஆசைப்பட்டு அழைத்தேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு தீபாவளியன்று கோவை வந்தார்.

போனில் பேசும்போது தேன் குரலாக பேசிய சத்யா, நேரில் பார்த்தபோது சுமாராகத்தான் இருந்தார். எதிர்பார்த்தபடி அழகாக இல்லையே என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. இருந்தாலும் தவிர்க்க முடியாமல் சத்யாவை அழைத்து கொண்டு கோவையில் பல இடங்களுக்கு சென்று சுற்றிக்காண்பித்தேன்.

பின்னர் இரவு நான் தங்கி இருந்த வீட்டுக்கு சத்யாவை அழைத்து வந்து அவருடன் உல்லாசமாக இருந்தேன். இந்த நிலையில் எனக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பதை சத்யாவிடம் கூறினேன். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சத்யா, நீங்கள் எனக்கு மட்டும் தான் சொந்தம், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், தன்னுடன் உல்லாசமாக இருந்ததை எனது குடும்பத்தினரிடம் அம்பலப்படுத்துவேன். மேலும் போலீசில் புகார் செய்து விடுவேன் என மிரட்டினார்.

இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் சத்யாவை கீழே தள்ளிவிட்டு, அருகில் கிடந்த சுத்தியலால் அவரது மார்பில் ஓங்கி அடித்தேன். பின்னர் சத்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பினேன். தற்போது போலீசில் மாட்டிக்கொண்டேன்" என வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்த நிலையில் கைதான செல்வராஜ் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-ஒன் இந்தியா-

Previous Post Next Post