வடபுலத்து இலக்கிய உறவுகளை கிழக்குக்கு அழைத்து வந்த அகர ஆயுதத்தின் ஆறாவது அமர்வு

அகர ஆயுதம் கலை-இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொதுவளியின் தொடர் அமர்வு நிகழ்வு (2015-11-01) நிந்தவூர் அல்- மஷ்ஹர் பெண்கள் பாடசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தென்கிழக்கின் நாட்டார் இலக்கியங்களுக்கு அதிகளவில் பங்களிப்பு செய்திருக்கும்  கவிஞர். சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் அவர்களின் முன்னிலையில், ஆசுகவி அன்புடீன் அவர்களின் தலைமையில் அகர ஆயுதம் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதம பொறியியலாளர் கவிஞர் தம்பிலெப்பை இஸ்மாயில் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

அரங்கின் தலைமையானஆசுகவி அன்புடீன் தலைமையுரையாற்றினார்.அகர ஆயுதத்தின் அறிமுகத்தையும் வரவேற்பையும் பிரதான செயற்பாட்டாளர் கிராமத்தான் கலீபாவும்
கிராமிய இலக்கியங்கள் மற்றும் நாட்டார் இலக்கியங்கள் குறித்தான ஒப்பீட்டாய்வு உரைகளை வளவாளர்களான சிராஜ் மசூர், ஏ.பீ.எம்.இத்ரீஸ்,ஏ.எம்.சாஜித் ஆகியோர் நிகழ்த்தினர்.

மேலும் கருத்துரைகளை மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், கவிஞர் எஸ்.முத்துமீரான், ஜெஸ்மி எம். மூஸா, முஹம்மட் பாயிஸ் ஆகியோரும் வட்டார பழமொழிகள் பற்றியதான கருத்தாடலை ஒலி-ஒளிபரப்பாளர் ஏ.எல்.ஜபீரும் நிகழ்த்தினர்.

இடம்பெற்ற அகர ஆயுதம் கலை-இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொது வெளியின் சிறப்பம்சமாக ‘வடக்கு வாகனம்’ எனும் தொனிப்பொருளில் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 இளம் கலை இலக்கியவாதிகள் கலந்து தங்கள் பிராந்திய உணர்வுகளைச் சித்தரிக்கும் இலக்கியங்களை வெளிப்படுத்தினர்.

’வடக்கு வாகனத்தின்’ இலக்கிய குழுவின் சார்பாக கவிஞர்களான யோ. புரட்சி,முல்லைத்தீபன்,தர்ஷினி,பிரதீப், வேதிகா, அரவிந்த், காவலூர் அகிலன் ஆகியோர் கவிதை பாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

இலக்கியம் தாண்டி இறுக்கமான தமிழ் முஸ்லிம் உறவின் அவசியமும் பொதுவெளியில் உரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ‘வடக்கு வாகனம்’ குழவினருக்கு கனேடிய ‘படைப்பாளிகள் உலகம்’ இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் கவிஞர் யோ.புரட்சி மற்றும் கவிஞர் முல்லைத்தீபன் ஆகியோர் தலைமையேற்று வந்தனர்.

அமர்வுகளில் கிராமிய மணம் கமழும் கவிதை வெளிப்பாடுகள், சிறப்புரைகள்,  நாட்டாரியல் இலக்கியம் சார்ந்த பாரம்பரிய கலை வடிவங்களுடன் அதனை அடுத்த தளத்திற்கு நகர்த்துகிற முன்னெடுப்புகள் பற்றியுமான கனதிமிக்க உரையாடலும் நடைபெற்றது. இங்கு எழுத்தாளர்களிடமிருந்து புத்தகங்கள் சேகரிக்கும் பணியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இறக்காமம் ஜனாப். சமூக்கூன் அண்ணாவியாரின் தலைமையிலான மாணவர் குழுவினரால் நிகழ்த்தப்பட்ட -தென்கிழக்கிலங்கையில் பாரம்பரியமாயிருந்து தற்போது மருவி வருகிற பொல்லடி- களிகம்பு ஆட்டம்   அரங்கிலே கலை இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.

வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த ஆறாவது அகர ஆயுதம் கலை இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொதுவெளி நிகழ்வில் பிராந்தியத்தின் மூத்த இலக்கியவாதிகளான மாறன் யூ.ஷெயின், பாலமுனை பாரூக், மூத்த ஊடகவியலாளர்களான சலீம், எஸ்.எல்.மன்சூர் மற்றும் பல கலை இலக்கியவாதிகளும்,ஆர்வலர்களும்,புத்தி ஜீவிகளும் கலந்து சிறப்பித்தனர்.  இலக்கிய ஆர்வலர், செயற்பாட்டாளர் முஹம்மத் நாளீர் நன்றியுரையாற்றினார்.

இன்றைய அகர ஆயுதத்தின் நிகழ்வுகளை அதன் பிரதம செயற்பாட்டாளர்களான முஹம்மத் முர்ஷித், எஸ்.ஜனூஸ்,கிராமத்தான் கலீபா,அஹ்ஷன் இப்ராஹீம் ஆகியோர் நெறிப்படுத்தினர். அடுத்த அகர ஆயுதத்தின் அமர்வுகள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவித்தல் வெகுவிரைவில் வெளிவரும்.
-எம்.வை.அமீர் -
Previous Post Next Post