( புவி)
பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் குறித்த சுற்றுவளைப்புகளை மேலும் அதிகப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸ் தலைமைக்காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் இன்று அதிகரித்துள்ள வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலக கோஷ்டியினரையும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோரையும் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் நாட்டின் அனைத்து பாகங்களையும் உள்ளடக்கிய வகையில், போதைத்தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு சட்டவிரோத போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இச்சுற்றிவளைப்புகள் அதிகரிக்கப்பட்டு தயவு தாட்சன்யமின்றி இதில் ஈடுபடும் அனைவரும் கைதுசெய்யப்படுவர் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.