தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளுடன் இந்தியர் கைது



(புவி) 



டுபாயிலிருந்து இலங்கைக்கு தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயற்சித்த இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று அதிகாலை சுங்க பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,



டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த இந்திய பிரஜையொருவர் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் தங்க நகைகளை, வாகன பழுதூக்கும் இயந்திரத்தில் மிக சூட்சுமமாக மறைத்து வைத்து கடத்த முயற்சிக்கையில் சுங்க பிரிவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் இந்தியாவைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 3.013 கிலோகிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுகள் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.



இவை இலங்கை பெறுமதியில் 19,082,630 ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இந்தியர் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவினர் அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர் என்றார்.

Previous Post Next Post