(புவி)
தரமற்ற வாகனங்கள் நெடுஞ்சாலைகளுக்குள் பிரவேசிப்பதால் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும் வாகனங்கள் கோளாறுகளுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. எனவே இவற்றை தடுக்கும் முகமாக தரமற்ற வாகனங்களை அதிவேகநெடுஞ்சாலைகளுக்குள் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தாெடர்பான பணிப்பாளர் எஸ்.பி.இந்திய ஹப்புகொட தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தரமற்ற மற்றும் பழுதடைந்த வாகனங்களின் பிரவேசத்தால் அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்களும் வாகனங்கள் பழுதடையும் நிலையும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தற்போது போக்குவரத்து சபை காணப்படுகின்றது.
எனவே, அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்களில் வாகனங்களை சோதனைக்குட்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கென இப்பகுதியில் பிரத்தியேக போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனங்களின் சுக்கான்களையும், பிறேக் கருவிகளையும், ஆசனப் பட்டிகளையும், வேகமாணிகளையும் சோதிப்பார்கள். அவற்றுடன் நியம தராதரங்களுக்கு அமைவாக டயர்களை கொண்டிராத வாகனங்களும் சோதனைகளில் தேராத வாகனங்களும் நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டாது.
மேலும் அதிகவேக நெடுஞ்சாலைகளில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் 1969 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உதவியை நாடலாம் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.