கல்முனை மண்ணை பாதுகாப்பதற்காக கடந்த 17 வருடங்கள் தனி ஒருவனாக நின்று போராடியுள்ளேன் - கல்முனையில் பிரதி அமைச்சர் ஹரீஸ்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வைத்து கல்முனை மாநகரினை சிதைப்பதற்கும் துண்டாடுவதற்கும் திறைமறைவில் நடக்கும் சதிகளுக்கு மக்கள் இடமளிக்ககூடாது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை 15ம் வட்டாரத்தின் வேட்பாளர் சட்டத்தரணி அன்புமுகையதீன் றோஷனின் தேர்தல் காரியாலயம் கல்முனை முகையதீன் பள்ளிவாசல் வீதியில் திறந்து வைக்கும் நிகழ்வு 2018.01.01 இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இம்முறை நடக்கயிருக்கும் தேர்தரில் மக்கள் தங்களது வட்டார வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்திலேனும் வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலையிலிருந்து விடுபட்டு தங்களது வட்டார வேட்பாளரை அதிகபட்ச வாக்குகளால் வெற்றியடையச் செய்ய வேண்டும். இதனால் கட்சிக்கு கிடைக்கவிருக்கும் மேலதிக ஆசனங்களினூடக யாரினதும் தயவின்றி கட்சி கல்முனை மாநகர சபையில் தனித்து ஆட்சியமைக்கும்.

கல்முனை மண்ணுக்கு ஏற்படவிருந்த ஆபத்துக்களை கடந்த 17 வருடங்களாக தனி மனிதனாக நின்று கல்முனை மண்ணின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கல்முனையை பாதுகாத்துள்ளேன். இன்று இச்சதிகாரர்கள் கல்முனை மண்ணை இத்தேர்தலில் துண்டாடுவதற்காக மக்கள் மத்தியில் பிரதேசவாத கருத்துக்களை விதைத்து வருகின்றனர். பிரதேசவாத கருத்துக்கள் மக்கள் மனங்களில் இலகுவாக பதியப்படுபவையாகும் இதனை வைத்து ஊர்களுக்கிடையில் பிரிவினைகளை, மனக்கசப்புகளையும் ஏற்படுத்தி தங்களது  தேவைகளை நிறைவேற்ற சிலர் முட்பட்டுள்ளனர். இதற்கு மக்கள் இடம்கொடுக்கக் கூடாது.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடாது ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவது ஏன் என சிலர் கட்சியின் மீது விமர்சனங்களை தொடுத்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதானது தலைவர் ஹக்கீம் ரணிலின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வதற்கோ, ரணிலை திருப்திப்படுத்துவற்கோ அல்லது அரசின் சலுகைகளுக்கோ அல்ல என்பதை கட்சியின் போராளிகள், ஆதரவாளர்கள், அபிமானிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தேர்தலில் கல்முனை மண்ணுக்கு பல சதிகள் பல்வேறு வடிவங்களில் பின்னப்பட்டுள்ளது. பின்னப்பட்டுள்ள சதிகளை அவிழ்ப்பதற்கான உபாயமாகவே இத்தேர்தலில் நாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து களமிறங்கியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

-றியாத் ஏ. மஜீத்-
Previous Post Next Post