ஊருக்குள் காட்டு யானை புகுந்து அட்டகாசம் : ஒருவர் பலி வனஜீவராசி அதிகாரிகளின் முயற்சியால் யானை துரத்தப்பட்டது.

பொத்துவில் பகுதியில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஐம்பத்தி மூன்று வயதுடைய பாக்கியவத்தை பகுதியைச் சேர்ந்த எம்.சலீம் என்பவரை தாக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இதே வேளை 37 வயதுடைய பெண் ஒருவரையும் தாக்கியுள்ளது. குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், குறித்த யானை பொத்துவில் பாக்கியவத்தைப் பகுதியிலிருந்து நான்காம் வாட் ஊடாக பொத்துவில் ஹிதாயாபுரப் பகுதிக்குள் புகுந்து வீடுகளுக்கும் மதில்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கூடிய பிரதேச மக்கள் யானையை விரட்ட முயற்சித்த போது யானை பொத்துவில் முஹுது மகா விகாரையின் காட்டுப்பகுதிக்குள் புகுந்து கொண்டது. அவ்விடத்திற்கு விரைந்த லகுகலை வனஜீவராசி அதிகாரிகள், பொத்துவில் பொலீஸார் மற்றும் அறுகம்பை விஷேட அதிரடிப்படையினர் சேர்ந்து யானையை அகற்ற முயற்சித்த போதும் மாலை 06.00 வரை பயனளிக்கவில்லை.








பின்னர் வனஜீவராசி அதிகாரிகளினால் யானை வெடில் வீசப்பட்டதன் பிற்பாடே யானை காட்டுப்பகுதியை விட்டு அகன்றதுடன் மீண்டும் வந்த வழியாக ஊருக்குள்ளால் சென்று பொத்துவில் 01ம் கட்டை வனப்பகுதியை அடைந்தது.




மேலும் குறித்த காட்டு யானையை ஊருக்குள் இருந்து அகற்றுவதற்கு உதவிய லகுகலை வனஜீவராசி அதிகாரிகள், பொலீஸார், விஷேட அதிரடிப்படையினர் மற்றும் ஏனையோருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவிப்பதுடன் இனிமேல் இவ்வாறான செயற்பாடுகள் நடக்காமல் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தனர்.

-எம்.எஸ்.சம்சுல் ஹுதா, பொத்துவில்-
Previous Post Next Post