மடவளை மதீனா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி!

மடவளை பஸார் மதீனா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி (29) திங்கட்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஜனாபா எம்.இஸட்.யூ.ஹிதாயா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வுக்கு வத்தகம வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.கே.விஜயரட்ன கௌரவ அதிதியாகவும், மத்திய மாகாண உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் அதுல ஜயவர்தன, வத்தகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நவரட்ண, நகர திட்டமிடல், தேசிய நீர்வழங்கல் அமைச்சின் இணைப்பாளரும், மடவளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுத் தலைவருமான ஏ.எல்.எம்.றிஷாட் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும் திரளான பொதுமக்கள்; கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளுக்கு பாடசாலை நிர்வாகத்தினரால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.
இதன்போது மாணவர்களுக்கான மெய்வல்;லுனர் போட்டிகள், அஞ்சலோட்டப் போட்டிகள், மாணவர்களின் அணி வகுப்பு மற்றும் உடற்பயிற்சி நிகழ்சிகளும் இடம்பெற்றன.
நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் 964 புள்ளிகளைப் பெற்று மினா இல்லம் இவ்வருடத்திற்கான சம்பியனானது. 883 புள்ளிகளைப் பெற்று சபா இல்லம் இரண்டாம் இடத்தையும், 817 புள்ளிகளைப் பெற்று ஹிறா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்களை பிரதி அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
-ஹாசிப் யாஸீன்-
Previous Post Next Post